திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி திமுக பெண் கவுன்சிலரை, அதே கட்சியைச் சேர்ந்த ஆண் கவுன்சிலர் தகாத வார்த்தைகளால் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மன்னார்குடி நகராட்சி 29-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கலைவாணி. இவரது வார்டுக்குட்பட்ட ருக்மணி குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புபணிகளை எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அக்.10-ல் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கலைவாணி பங்கேற்கவில்லை.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு நகராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலர் பாண்டவர், கலைவாணியை செல்போனில் தொடர்பு கொண்டு, எம்எல்ஏ ஆய்வின்போது வராத காரணம் குறித்து கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே, திருவாரூர் எஸ்பி அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலமாக கலைவாணி நேற்று அளித்த புகாரில், ‘‘11-வது வார்டு கவுன்சிலர் பாண்டவர், நேற்று முன்தினம் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசி மிரட்டினார். ஆயுதங்களுடன் எனது வீட்டுக்கு வந்து, என்னையும், எனது கணவரையும் அடித்ததுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினார். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.