“இது கொடுமை அல்லவா?” - மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் புதிய கொள்கை முடிவின்படி பணியில் சேராமல் இருந்த மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேருவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள புதிய கொள்கை முடிவானது வரும் காலத்திலும் தொடருமா, மக்கள் நலப் பணியாளர்களின் பணிக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா என்பது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியில் சேராத மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை அரசின் புதிய கொள்கைபடி 489 பேர் பணியை ஏற்கவில்லை, மற்றவர்கள் பணியை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். இவர்கள் ஏன் பணியை ஏற்கவில்லை என்பது குறித்தும், பணிக்கான ஊதியம் மற்றும் ஊதிய வேறுபாடுகளையும் விளக்கி ஒரு பட்டியல் தயாரித்துள்ளதாக கூறி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்தான் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணியில் பாதுகாப்பு இல்லை. எனவே, இந்த 489 பேரும் பணியில் சேரப்போவதில்லை" என்றார்.

அப்போது நீதிபதிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நிலையான திட்டமா, எதிர்காலத்திலும் இத்திட்டம் நிலையாக இருக்குமா என கேள்வி எழுப்பினர். அப்போது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், "இது மத்திய அரசின் திட்டம். தற்போதைய நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் எதிர்காலத்திலும் தொடருவது என்பது மத்திய அரசின் முடிவில் தான் உள்ளது. மேலும், தற்போது தமிழக அரசின் நிதி சுமை காரணமாக 7500 ரூபாய் என்ற ஊதியமே நிர்ணயம் செய்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டது" என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இவ்வாறு உறுதி கொடுக்க முடியாத நிலையில், இந்தப் பணியாளர்களுக்கு ஒரு நிரந்த தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு அரசு பதவிக்கு வரும்போது பணி வழங்குகிறது, மற்றொரு அரசு பதவிக்கு வரும்போது அவர்களின் பணியை பறிக்கிறது. இது அந்த பணியாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அல்லவா? எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட பணியை ஏற்ற மக்கள் நலப்பணியாளர்கள் பிரிவு தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் நலப்பணியாளர்கள் வேலையில்லாமல் தவித்து வந்தனர். தற்போது பெறுப்பேற்ற அரசு வேலை வழங்கியுள்ளது. எனவேதான் பெரும்பான்மையான பணியாளர்கள் பணியில் சேர்ந்தனர்" என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், "இந்த பணியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இது தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்" என்றனர்.

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் மேற்கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், எனவே தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE