மதுரை: தமிழக முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் இந்து முன்னணி துணைத் தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் பால்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த செப்டம்பர் 17- ல் திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வரை அவதூறாகவும் பேசியதாக போலீசார் என்னை கைது செய்தனர். என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சேலத்தில் தங்கியிருந்து, சேலம் நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.