சென்னை - நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக ஏ.சி. இல்லாத ஆம்னி பேருந்தில் ரூ.2,820 கட்டணம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டண பட்டியலை பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்தில் இருக்கைக்கு ரூ.2,327, படுக்கைக்கு ரூ.2,820 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விழாக் காலங்களில், ஆம்னி பேருந்துகளில் வரன்முறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 27-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘‘மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஓரிரு நாளில் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பார்கள். அதைவிட அதிகம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறினார். இந்நிலையில், அதிகபட்ச கட்டண பட்டியலை போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் மற்றும் துறை ஆணையர் இல.நிர்மல்ராஜிடம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து நேற்று சமர்ப்பித்தன.

முன்பு தெரிவிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தைவிட தற்போது 10 முதல்22 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, ‘‘குளிர்சாதன வசதி இல்லாத பேருந்து, குளிர்சாதன வசதியுள்ள பேருந்து, வால்வோ பேருந்து ஆகிய பேருந்து வகைகளின் இருக்கை மற்றும் படுக்கையில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் மட்டுமே இடம்பெறும் வகையில்பட்டியல் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணத்தை சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமையாளரே நிர்ணயிப்பார்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE