தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளது. ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வரும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் காரணமாக அடுத்த 15 நாட்களில் 6 ஆயிரம் சோதனைக் கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை தமிழகத்தில் 5064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1267 பேருக்கு இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிக அளவு சோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் 6000 சோதனை கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வரும் 26 ஆம் தேதி திறக்கப்படும். டெண்டர் திறக்கப்பட்டு பணி ஆணை வழங்கியவுடன் 15 நாட்களின் அந்த நிறுவனங்கள் சோதனைக் கருவிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE