கிருஷ்ணகிரியில் ‘காக்கும் காவல் நண்பர்கள்’ சார்பில் உயிரிழந்த ஏட்டு குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் வழங்கல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில், ‘காக்கும் காவல் நண்பர்கள்’ அமைப்பு சார்பில்உயிரிழந்த ஏட்டு குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் குமார். இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு, ‘காக்கும் காவல் நண்பர்கள்’ அமைப்பின் பங்களிப்பு தொகையாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாநில அளவில் உள்ள 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ.14 லட்சம் நிதி திரட்டினர். அத்தொகையை அவரது குடும்பத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி பங்கேற்று இறந்த ஏட்டு குமாரின் குடும்பத்தினரிடம் ரூ.14 லட்சத்தை வழங்கினார். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன் (கிருஷ்ணகிரி), மணியம்மை (தருமபுரி), ஏட்டு வெங்கடேசன் மற்றும் புஷ்பலதா, கற்பகம், பழனி, ராமச்சந்திரன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE