அசம்பாவிதங்களை தவிர்க்க பள்ளி பேருந்துகளில் கேமரா, சென்சார் கட்டாயமாகிறது: விரைவில் அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழக்கும் சம்பவங்கள் பரவலாக நடந்தன. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவு, உள்துறை செயலரால் கடந்த ஜூன் 29-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதில், ‘பள்ளி பேருந்துகளின் முன்புறம் கேமரா பொருத்த வேண்டும். வாகனத்தை பின்னோக்கி இயக்கும்போது, பின்புறம் இருப்பது முழுமையாக தெரியும் வகையில் வாகனத்தின் பின்புறமும் கேமரா பொருத்த வேண்டும். பின்புறம் இருப்பதை உணர்ந்து உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் சென்சார் கருவியும் பொருத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு மீதான கருத்துகேட்பு கடந்த ஜூலை 29-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், இதுதொடர்பான உத்தரவை வெளியிட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE