தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, விநாடிக்கு 31ஆயிரம் கன அடியாக குறைந்த நிலையில் பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால், உபரிநீர் முழுக்க தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இதுதவிர, தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி தடை விதித்தது.
இந்நிலையில், இன்று(13-ம் தேதி) காலை நீர்வரத்து விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி என்ற நிலையில் உள்ளது. எனவே, ஒகேனக்கல் காவிரியாற்றில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வழித்தடங்களில் மட்டும் இன்றுமுதல் பரிசல் இயக்கிட மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கின்போது பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் முழுமையாக சேதமடைந்தன. எனவே, அவற்றை சீரமைத்த பின்னரே அருவி உள்ளிட்ட இடங்களில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால், அருவி உள்ளிட்ட இடங்களில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் உள்ளது.