எஸ்.பி.வேலுமணி வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்: உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகியிருந்தார். மத்திய அரசின் வருமான வரித்துறை வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கில் ஆஜராகலாம் என்று தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், இந்த மனுவை தனிநீதிபதி தான் விசாரிக்க வேண்டும், இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்றும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் ஆட்சேபம் குறித்து, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்.

வேலுமணி தாக்கல் செய்த வழக்குகள் மீதான இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE