பள்ளிக்கு 4 கி.மீ நடந்து செல்லும் நிலை: பேருந்து வசதி கோரி விருதுநகர் ஆட்சியரிடம் மாணவர்கள் முறையீடு

By செய்திப்பிரிவு

தினமும் 4 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்து சென்று வருவதால் உரிய நேரத்தில் பேருந்து இயக்க ஆட்சியரைச் சந்தித்து மாணவ, மாணவிகள் முறையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பந்தனேந்தல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4 கி.மீ தொலைவில் உள்ள ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். காலையில் பள்ளி செல்வதற்கும், மாலையில் வீடு திரும்புவதற்கும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லை.

இதனால், தினமும் 4 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பந்தனேந்தல் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சீருடையுடன் வந்தனர். தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களிடம் விசாரித்தனர்.

பின்னர் மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, விருதுநகரிலிருந்து காலையில் கல்குறிச்சி வழியாக புதுப்பட்டிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து பந்தனேந்தலுக்கு காலை 10.30 மணிக்கு வருவதாகவும் இதே போன்று புதுப்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் அரசுப் பேருந்து பிற்பகல் 3.30 மணிக்கே சென்று விடுவதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் தினமும் 4 கி.மீ தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருவதாகத் தெரிவித்தனர். அதோடு மழை நேரங்களில் நனைந்தபடி வருவதால் புத்தகங்கள், நோட்டுகள் நனைந்து மிகுந்த சிரமப்படுவதாகத் தெரி வித்தனர்.

இதையடுத்து, வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பாஸ்கரன் மற் றும் அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலர்களை அழைத்து பந்தனேந்தல் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நேரத்தை மாற்றி இயக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளி வேன் மூலம் அவர்களது பள்ளிக்குச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE