‘இதுவரை நடவடிக்கையே இல்லை’ - அதிமுக அலுவலக வழக்கில் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஐகோர்ட்டில் கூடுதல் மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட விவகாரத்தில் சிபிசிஐடி உரிய விசாரணை நடத்த தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை. குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து போலீஸார் பார்வையிடாதது அதிர்ச்சியளிக்கிறது. பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருடப்பட்ட பொருட்களை மீட்பது தொடர்பாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பிரதான எதிர்க்கட்சியாக தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் ஆளுங்கட்சிக்கு நன்மை ஏற்படும். தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணை குழு கேட்கப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில், சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி டிஜிபி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூடுதல் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE