கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சென்னையில் பழனிசாமியுடன் சந்திப்பு: மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவ கோரிக்கை

By செய்திப்பிரிவு

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகஇடைக்கால பொதுச்செயலருமான பழனிசாமியை கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர், சென்னையில் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது தங்கள் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவக்கோரி மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே விசாரணை தாமதமாக நடைபெறுவதாக கூறி மாணவியின் பெற்றோர் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, விசாரணையை வேகமாக நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரினர்.

இதற்கிடையில், மாணவி சடலத்தின் இரு உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் மற்றும் அவற்றை ஆய்வு செய்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த அறிக்கை ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனடிப்படையில், மாணவி மரணத்துக்கு பாலியல் பலாத்காரமோ, கொலையோ காரணமில்லை என தெரிய வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனு அளித்தனர்: இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று சந்தித்தனர். அப்போது, “எங்கள் மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணத்துக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து மனுவும் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE