விநாயகர் சதுர்த்தி | கிருஷ்ணகிரியில் 12-வது ஆண்டாக பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 12-வது ஆண்டாக இஸ்லாமியர்கள் பூஜை பொருட்களை வழங்கினர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சீனிவாசா நகரில் பொதுமக்கள் முழுவதும் களிமண்ணால் ஆன 12 அடி உயர பிள்ளையார்பட்டி விநாயகர்சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த விநாயகர் சிலைக்கு, மிலாடி நபி விழா குழுவின் தலைவர் அஸ்லாம் தலைமையில் இன்று (ஆக.31) பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

12-வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகருக்கு, இஸ்லாமியர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE