மதுரை - கோவைக்கு இனி தினசரி விரைவு ரயில்

By செய்திப்பிரிவு

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை - பழநி இடையே ஒரு விரைவு சிறப்பு ரயிலும் (06480), பழநி - கோவை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06462) தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தது. மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பழநியில் சிறிது நேரம் காத்திருந்து, புதிய ரயிலாக புறப்பட்டு கோவைக்கு பிற்பகல் 1.15 மணிக்கு சென்று அடையும்.

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - பழநி இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06463), பழனி - மதுரை இடையே ஒரு சிறப்பு ரயிலும் (06479) தனித்தனியாக இயங்கி வந்தன. இந்த ரயில் கோவையில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு பழநியில் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.35 மணிக்கு வந்து சேரும்.

தற்போது இந்த சிறப்பு ரயில்கள் ஒரே வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டு செப்டம்பர் 1 முதல் இயக்கப்படுகின்றன.

இதன்படி மதுரை - கோவை விரைவு ரயில் (16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு கோவை சென்றடையும். மறு மார்க்கத்தில் கோவை- மதுரை விரைவு ரயில் (16721) கோவையில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை வந்தடையும்.

இதன்மூலம் மதுரை-கோவை விரைவு ரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்களம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE