மேட்டூர் அணைக்கு 50,000 கன அடி நீர்வரத்து: 11 டெல்டா மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By வி.சீனிவாசன்

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 11 டெல்டா மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் நீர்வளத் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை காலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, இரவு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்தது. மாலை 4 மணிக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், 16 கண்மதகு வழியாக விநாடிக்கு 27 ஆயிரம் கன அடியும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், கூடுதலாக காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி உள்பட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கும், மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டினம், அண்ணாநகர், பெரியார் நகர், தொட்டில்பட்டி, போடிநாயக்கன்பட்டி, காவேரிகிராஸ், நவப்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்ற தயார் நிலையில் பணியாளர்கள் நிறத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE