இபிஎஸ் குணாதிசயங்களைத்தான் கண்டிக்கிறேன்; அவருடன் விரோதம் இல்லை: டிடிவி தினகரன்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: "அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும், என்ற உயரிய நோக்கத்தோடு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான், இவர்களது எண்ணங்கள் நிறைவேறும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரது கருத்துகளை நான் வரவேற்கிறேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும், என்ற உயரிய நோக்கத்தோடு அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்களுடைய கருத்தை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் அதிமுகவில் உள்ள சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரது எண்ணங்கள் நிறைவேறும். யாருடனும் எங்களுக்கு அரசியல் ரீதியான எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமியிடம்கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடெல்லாம் கிடையாது. அவருடைய குணாதிசயத்தைத்தான் நான் திரும்ப திரும்ப கண்டிக்கிறேனே தவிர, மற்றபடி அவருடனோ, எந்த கட்சியுடனோ எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE