பகுத்தறிவாளர்கள்தான் அதிக வயது வரை வாழ்கின்றனர்: கி.வீரமணி கருத்து

By செய்திப்பிரிவு

பகுத்தறிவாளர்கள்தான் அதிக வயது வரை வாழ்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 100 வயதைக் கடந்த பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். குத்தாலம் ஒன்றியத் தலைவர் முருகையன், நகரத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது:

சாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி அரசியல் சட்டத்துக்கு பெரியார் எதிர்ப்புத் தெரிவித்து, அதை மாற்ற கால அவகாசமும் தந்தார். ஆனால், அதன் பிறகும் மாற்றப்படாததால், அரசியல் சட்ட நகல் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.திராவிடர் கழகத்தில் 100 வயதைக் கடந்த பகுத்தறிவாளர்கள் பலர் உள்ளனர்.

இவர்களில் யாரும் கோயிலுக்குச் சென்று பூஜை செய்ததில்லை. இதன்மூலம், கடவுள் நம்பிக்கையை நான் கொச்சைப்படுத்தவில்லை. ஆனால், சிந்தித்து செயல்பட வேண்டும். பகுத்தறிவாளர்கள்தான் அதிக வயதுவரை வாழ்கின்றனர். அறிவியல்தான் வயதை வளர்த்துள்ளது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி செய்வதுதான் திராவிட மாடல். அதிமுக தனது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டது தன்மானத்துடன் செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள்தான். தமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது என்றார்.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE