புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | “நெல்லை என்ற சொல்லுக்கு தமிழகம் முழுவதும் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்” - வைகோ 

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: எழுத்தாளர், இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லைக் கண்ணன் மறைவையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியில் உள்ள நெல்லை கண்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழால் புகழ்பெற்ற நெல்லைக்கு, நெல்லையப்பர் ஆலயத்தால் புகழ்பெற்ற நெல்லைக்கு, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கின்ற நெல்லைக்கு, சமயச் சொற்பொழிவு ஆற்றுவதிலும், இலக்கியச் சொற்பொழிவு ஆற்றுவதிலும் ஈடு இணையற்ற தீரராகத் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன். நெல்லை என்று சொன்னாலே கண்ணனையும் சேர்த்துச் சொல்லுகின்ற அளவுக்கு புகழ் வாய்ந்தவராக வாழ்ந்தவர்.

அவரது சொற்பொழிவுகளில் காட்டமும் இருக்கும், காரமும் இருக்கும், நகைச்சுவையும் இருக்கும், இலக்கியம் இருக்கும், சமயச் சிந்தனைகள் இருக்கும். அப்படிப்பட்ட நெல்லை கண்ணன், குறுக்குத் துறையைப் பற்றிகூட ஒரு வார ஏட்டில் தொடர்ந்து எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

நெல்லை கண்ணன் அவர்கள் வீட்டிற்கு நான் வந்திருக்கிறேன். அவரது இந்த வீட்டிற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வருகை தந்ததாக என்னிடத்தில் கூறினார். தியாகச் சுடர் காமராஜை தலைவராக நேசித்தார். தமிழ்நாடு முழுவதும் நெல்லை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் நெல்லை கண்ணன்.

பட்டிமன்றங்களில் அணித் தலைவராகவும், நடுவராகவும் இருந்து அவர் நிகழ்த்திய அற்புதமாக உரைகள் என்றென்றும் நம் நெஞ்சில் எதிரொலிக்கும். மணிக் கணக்கில் இலக்கியச் சுவையோடு அனைவரையும் ஈர்க்கக்கூடிய சொற்பொழிவு ஆற்றக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

அப்படிப்பட்ட ஆற்றலாளருக்கு அரசியல் வாழ்வில் அவர் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காவிடினும்கூட, அவரை எல்லோரும் மதித்தார்கள். நெல்லை கண்ணன் மறைவு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டும் இல்லாமல், இலக்கிய உலகத்துக்கும், சமய உலகத்துக்கும் பேரிழப்பாகும். அவரது புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும். நெல்லை என்றவுடன் கண்ணனுடைய பெயரும் நம் நினைவுக்கு வரும். நெல்லை கண்ணன் புகழ் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் என்று தெரிவித்தார்.

எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல்: “தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாகப் பணி செய்தவரும் தமிழ் கடல் என்று எல்லோராலும் போற்றப்பட்ட நெல்லை கண்ணன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவினால் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்” என்றார்.

பெருந்தலைவர் காமராசர், கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். 1970 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர். பல்வேறு மேடைகளில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர்.தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைச் சமீபத்தில் பெற்றவர்.

இஸ்லாமியச் சமூகத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசுவதில் மிகப்பெரிய அளவில் முனைப்புக் காட்டியவர். ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு மேடைகளில் முழங்கியவர். நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்துப் பேசியதற்காகத் தனது முதுமை வயதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE