அரசு பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையில் டிஜிட்டல் டிக்கெட்: தமிழக போக்குவரத்துத் துறை அசத்தல் திட்டம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் விழுப்புரம், கும்பகோணம், கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மண்டலங்களில் 20,304 பேருந்துகள் மூலம் தினசரி 1.5 கோடி பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கு காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது. இந்த காதிக பயணச் சீட்டு முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதிக அளவு ரொக்க பணப் பரிமாற்றம் உள்ள காரணத்தால், இதை கண்காணிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இதை சரிசெய்ய மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் மதுரை, கோவை அரசு போக்குவரத்து கழகங்களில் இதை அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE