பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கைது 

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசி, தலைமறைவாக இருந்த திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் எனப் பேசினார்.

ஏற்கெனவே 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனல் கண்ணனை கைது செய்ய மதுரவாயல்,வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் சைபர் க்ரைம் போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவான அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில்,புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE