சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு: இன்று முதல் சுவைக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

‘உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நேற்று முதல் 3 நாட்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. 'சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022' என்ற பெயரில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் பல்வேறு திரைக் கலைஞர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஆகஸ்ட் 13 ) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், " நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால், இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் அரங்கு அமைக்கப்படவில்லை" என்றார்.

அவருடைய பதில் விமர்சனங்களுக்கு உள்ளானது. யாரும் அனுமதி கோரவில்லை என்பது மழுப்பலான பதில் என்று விமர்சிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைக்க ஒரு உணவகம் முன்வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்க பீப் பிரியாணி அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE