முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்பி.க்கள் கூட்டம்: கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அத்துடன், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆக.11-ம் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, அவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க, தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கு பெறும் கலந்தாய்வுக் கூட்டம்ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து போதைப் பொருட்கள் பிடிபட்டு வரும் நிலையில், இவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், இக் கூட்டத்தின் இறுதியில் போதைப் பொருட்களுக்கான தடை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE