“காவிரி - குண்டாறு திட்டப் பணி நடப்பதெல்லாம் கே.பாலகிருஷ்ணனுக்கு தெரியாது” - துரைமுருகன் பதில்

By செய்திப்பிரிவு

வேலூர்: காவிரி - குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி - குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது. காவிரி - குண்டாறு திட்டத்தில் தீபகற்ப ஆறுகளையெல்லாம் இணைப்பது ஒன்று. இன்னும் அந்தத் திட்டத்தில் காவிரியில் தண்ணீர் வரவில்லை.

இருந்தாலும் தமிழக அரசு காவிரியிலிருந்து குண்டாறை இணைக்கும் அந்தத் திட்டத்தை நான்கு பகுதிகளாக பிரித்து, முதலில் கரூர் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் பாலகிருஷ்ணனுக்கு தெரியாது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE