உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்க: விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நீட்டிக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் கல்விக்கடனை செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டுக்கப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர்.

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக மாணவர்களை அந்நாட்டிற்கு அனுப்பவும் பெற்றோர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் மாணவர்களால் எப்படி கல்விக் கடன் செலுத்த முடியும்.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அந்த மாணவர்கள் படிப்பை இங்கேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE