சென்னை: ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.
தமிழக மின்வாரியம், ஆண்டுதோறும் நவம்பருக்குள் தன் மொத்த வருவாய், தேவை அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆணையம்ஆய்வு செய்து, வருவாயைவிட செலவு அதிகம் இருந்தால், பற்றாக்குறையை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கும்.
2021-22 நிலவரப்படி மின்சார வாரியத்தின் மொத்த கடன் சுமைரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22-ல் மின்வாரியம்கடனுக்காக செலுத்த வேண்டியவட்டித் தொகை ரூ.16,511 கோடியாக உயர்ந்துவிட்டது. எனவே, 8ஆண்டுகளுக்குப் பிறகு மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம்திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக்கோரி ஆணையத்திடம் மனு சமர்ப்பித்துள்ளது.
இந்த மனு மீது ஆணையம் விசாரணை நடத்துவதோடு, மக்களிடம் கருத்தும் கேட்கிறது. அதன்பிறகு மின்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்படும். ஆணையம் அனுமதி அளித்தால், வரும் செப்டம்பர் முதல் மின்கட்டண உயர்வை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆணையத்தில் மின்வாரியம் சமர்ப்பித்துள்ள மனுவில், ஆண்டுதோறும் மின்கட்ட ணத்தை 6% உயர்த்தவும் அனுமதி கோரியுள்ளது. அதாவது, வரும் 2026-27 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
2017-ல் உதய் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மின்வாரியம், தமிழக அரசு, மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்த 6% உயர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், 2026-27 நிதியாண்டு வரை மின்வாரியம் மின்கட்டண திருத்த மனுக்களை தாக்கல் செய்யாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.