மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க நிரந்தர தடை 

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சினிமா படப்பிடிப்பு தடையைத் தொடர்ந்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க தொல்லியல்துறை நிரந்தர தடை விதித்துள்ளது.

திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது கல்வி சுற்றுலாவுக்காகவும் மாணவர்கள் அதிகளவு வந்து செல்கிறார்கள்.

கடந்த காலத்தில் இந்த அரண்மனை சினிமா படப்பிடிப்புகளுக்காக வாடகைக்குவிடப்பட்டன. அப்போது அரண்மனையின் கட்டிடங்களை சினிமா ஷூட்டிங் தொழிலாளர்கள் சேதப்படுத்தினர். ஆணிகள் அறைந்து அதன் சுவர்களை நாசப்படுத்தியதால் அதன் கட்டிடக்கலை அழகு சிதலமடைந்தது. அதனால், நீதிமன்றம் உத்தரவின்பேரில் அரண்மனையில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அரண்மனைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் குறும்படம் எடுத்து அதை வணிக நோக்கில் யூடியூப்பில் வெளியிட்டு வந்தனர். திருமண ஜோடிகள் மகாலில் நின்று புகைப்படம், வீடியோ எடுத்தனர். அதனால், தற்போது மெல்ல மெல்ல மீண்டும் அரண்மனை சுவர்கள், அதன் கட்டிடக் கலைகள் சேதப்படுத்தப்பட்டன. அதனால், தற்போது தொல்லியல்துறை நிரந்தரமாக திருமலை நாயக்கர் அரண்மனையில் புகைப்படம், வீடியோ, குறும்படம், படப்பிடிப்புகள் எடுக்க தடை விதித்துள்ளது.

தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர், அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் அந்த உத்தரவில், ''தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு நிரந்தரமாக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், திருமலை நாயக்கர் அரண்மனையில் பிளாஷ் லைட், அம்பர்லா லைட் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அதுபோல் புகைப்படம், குறும்படம், பெரும்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது,'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE