திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நர்சிங் மாணவி, விடுதியில் தற்கொலை செய்துகெண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே விடுதியுடன் கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில்,ஈரோட்டைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு நர்சிங்க படித்து வந்தார். இந்நிலையில், நேற்று அந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று பகல் வழக்கம்போல், அனைத்து மாணவிகளும் உணவருந்த சென்றபோது, மேலே உள்ள அறைக்கு சென்ற மாணவி நீண்டநேரம் திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மேலே சென்று பார்த்தபோது, ஈரோட்டைச் சேர்ந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருவேற்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கல்லூரி நிர்வாகம், மற்றும் உடன் பயிலும் சக மாணவிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஆவடி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று முதலே தனியார் கல்லூரியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE