அதிமுக பொதுக்குழு வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு | வாதங்களின் முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். இந்த வழக்கை 3 வாரத்தில் உயர் நீதிமனறம் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இத்துடன் 15 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டத்தை நடத்த அதிகாரம் இல்லை. எனவே, பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்ட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், "அதிமுகவின் அடிப்படை விதிகள் மொத்தமும் மீறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிமையியல் வழக்குகள் முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை" என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள்,"மீண்டும் இரு தரப்பும் இணைய வாய்ப்பு உள்ளதா?" என கேள்வி எழுப்பினர். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் குழுவில் இருந்த சிலர் இணைய வாய்ப்பு இல்லை எனவும் , சிலர் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு இணைவு தொடர்பான விவகாரத்தை விட்டுவிடுவோம். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் என்ன விதி மீறல் நடந்துள்ளது? எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினர்

அதற்கு ஓபிஎஸ் தரப்பில்," பொதுக்குழுவே சட்டவிரோதம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. அனைத்து முக்கிய முடிவுகளும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரரை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர். எனவே அந்த பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். பொதுக்குழு முடிவுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஜூன் 23 மற்றும் ஜூலை 11-ம் தேதிகளில் நடந்த பொதுக்குழுவை எதிர்த்தும், உரிமையியல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது" என வாதிட்டார்.

அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. எனவே இந்த விவகாரதரதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை" என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம்" என தெரிவித்தனர்

அப்போது ஓபிஎஸ் தரப்பில், "தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால் ஜூலை 11-க்கு முன்பு உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். உயர் நீதிமனறம் இந்த வழக்கை 3 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE