நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6-க்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, முதல்வர் ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி இருந்தார். இதன்படி 2020 முதல் இந்த ஆண்டு மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருந்தன.

இவற்றில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி சட்ட மசோதா , சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 4-வது திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 3-வது திருத்த மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா, தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா ஆகிய 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE