தருமபுரி எம்பி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு பிராமணர் சமாஜம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்துக்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு பிராமணர் சமாஜம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சமாஜத்தின் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் சாய்ராம் தலைமை வகித்தார். மாநில தலைவர் அரிஹர முத்து பங்கேற்று சங்க நடவடிக்கைகள், தீர்மானங்கள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்; தமிழ்நாடு பிராமண சமாஜம் தொடர்ந்து அனைத்து சமுதாய ஒற்றுமை மேம்பாட்டுக்காக பாடுபடும். சனாதன தர்மத்தை தொடர்ந்து பின்பற்றுவதுடன், அதற்கு எவ்வித தடை மற்றும் இடையூறு ஏற்படாத வகையில் இருக்க மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு கோரப்படும்.

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறுவதுடன், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மாதம்தோறும் மின் கட்டண அளவீடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த அரசு நிகழ்ச்சியில் பூமி பூஜை விழாவில் அநாகரிகமாக பேசி ஆன்மிகத்துக்கு எதிராக செயல்பட்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்துக்கள் மனம் புண்படும் வகையில் நடந்த அவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரப்பளவில் பெரிய மாவட்டங் களான ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து 6 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை காரணமாக உள்ள நிலையில் அவற்றை தமிழக அரசு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE