போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய உள்துறை செயலரிடம் பாஜக மனு

By செய்திப்பிரிவு

சென்னை: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலர் கே.பணீந்திர ரெட்டியை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று சந்தித்துமனு கொடுத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மனு கொடுத்துள்ளார். தற்போதைய உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், 2019-ல் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தார்.

அப்போது, மதுரையில் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. அங்கிருந்த ஆணையர் தற்போது உளவுத் துறை ஏடிஜிபியாக இருப்பதால் குற்றச்சாட்டை சரியாக விசாரிக்க மாட்டார்கள். எனவே, அவர் உள்ளிட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யுமாறு மனு அளிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் பிடிபட்டதால் இந்த நிகழ்வு வெளியில் தெரியவந்துள்ளது. மதுரை அவனியாபுரம் செம்பூரணி தெருவில் மட்டும் 67 போலி பாஸ்போர்ட்கள் தரப்பட்டுள்ளன.

போலி பாஸ்போர்ட் விநியோகத்துக்கு தனி கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதற்கு பிரதமர்மோடியை அழைத்துள்ளனர். ஆனால், சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் பிரதமர் படம் இல்லை.

முதல்வர் படம் மட்டும் பெரிதாக இருக்கிறது. பிரதமரையும் அழைத்து, காழ்ப்புணர்ச்சியுடன் இதில் அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். பிரதமர் படத்தை அவர்கள் வைக்காவிட்டால், பாஜக சார்பில் நாங்கள் வைப்போம்.

கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததுபற்றி கூறுகிறீர்கள். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை, ஜனநாயக முறைப்படி நடத்தவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. பழைய தவறுகள் மீண்டும் நடக்காது எனநினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE