நீட் தேர்வு | மத்திய அரசுக்கான பதில்கள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பதில்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் மசோதா குறித்த மத்திய அரசின் கருத்துகள் மற்றும் கேள்விகளுக்கு தமிழக அரசு தயார் செய்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "குடியரத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநர் வழியாக தமிழக அரசு நீட் மசோதாவை அளித்தது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் இம்மசோதா குடும்ப நலத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டு, அந்த அலுவலகங்களின் குறிப்புகளுடன் ஆளுநர் அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது.

இந்தக் கடிதம் கடந்த 5-ஆம் தேதி தமிழக சட்டத்துறைக்கு வந்துள்ளது. கடிதத்தில் பல்வேறு கருத்துகளும், கேள்விகளும் இடம் பெற்றுள்ளன.

நீட் மசோதா நிறைவேற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு மசோதா நாட்டின் இறையாண்மைக்கோ, ஒருமைப்பாட்டிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது உள்ளிட்ட பதில்களை ஒன்றிய அரசிற்கு அளிக்க உள்ளோம்.

தமிழக சட்ட அமைச்சகத்திற்கு 5-ஆம் தேதி இந்தக் கேள்விகள் வந்தன. தயார் செய்துள்ள பதில்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். சரியான பதில்களை தெரிவித்துள்ளதால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE