அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்: கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகே, ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக அலுவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், கட்சி தலைமை அலுவலகத்தின் சாவியை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

10 நாட்களுக்குப் பின்னர் சீல் அகற்றம்: இதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த தென்சென்னை ஆர்டிஓ மற்றும் மயிலாப்பூர் வட்டாட்சியர் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றினார். அப்போது அதிமுக கட்சி அலுவலகத்தின் மேலாளர் மகாலிங்கம், துணை மேலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் கட்சி அலுவலகத்திற்குள் ஒரு மாத காலம் தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக அலுவலகத்திற்குள் முக்கிய நிர்வாகிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தவிர கட்சித் தொண்டர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE