முதல்வர் நலமுடன் இருக்கிறார்: மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் நலமுடன் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் மிகவும் நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே ஓய்வில் இருக்கிறார். முதல்வர் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அறிவிப்பார்கள்.

தற்போதைய கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆவடி நாசருக்கும் அண்மையில் பாதிப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு கரோனா இருக்கிறதா என எனக்கு அதிகாரபூர்வமாக தெரியாது. தொற்று தற்போது அரசியல்வாதிகளுக்கு மட்டும் வருவதாக கூற முடியாது. பலருக்கும் வேகமாக பரவுகிறது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கரோனா அதிகரித்துள்ளது. பெரியளவில் இல்லை என்றாலும் 100, 50 என்றளவில் அதிகரிக்கிறது. கரோனா பதிப்பில் 40 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும். அந்த சூழல் தற்போது இல்லை " இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE