ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிறப்பு வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஐரோப்பா , ஆப்ரிக்கா , அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2 ஆம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது. தமிழக கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.

சென்னை ,மதுரை , கோவை திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் , குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது. பதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் இருக்கா என ஆய்வு செய்யப்படுகிறது.

சென்னைக்கு ஜூலை மாதம் தினம்தோறும் 30 முதல் 40 விமானம் மூலம் 5 முதல் 9ஆயிரம் பயணிகள் வருகின்றனர். இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் ஒரு லட்சம் பயணிகள் வந்துள்ளனர். அதில் 1987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் . இதில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது , வீடுகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் குரங்கம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு தயாராகியுள்ளது. தமிழகத்தில் மாவட்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது, இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE