சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவுஎடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜூலை13-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாகக் கூறி, அரசாணையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாகவும், ரசாயன முறையிலும் அகற்றும் பணி முன்னேற்றத்தில் உள்ளது என்றும், இந்த விஷயத்தில் தமிழகஅரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூற முடியாது. அதேநேரம், அந்நிய மரங்களை அகற்றும் பணியில் தனியாரை ஏன் ஈடு படுத்தக்கூடாது’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE