இபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - ஓபிஎஸ் 'பதிலடி' அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உட்பட 22 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை - குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் இரா.விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.டி.கே. ஜக்கையன், ஆர்.பி. உதயகுமார், ஆதி ராஜாராம், திநகர் பி.சத்யா, எம்.கே. அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம், ஆர். இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடப்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE