அதிமுகவை பிரித்து அக்கட்சியை அழிக்க நினைக்கிறது பாஜக என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பட்டிமன்றம் நடைபெறும். ரூ.446 ஆக இருந்த சமையல் எரிவாயு விலையை மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.1,080 ஆக உயர்த்தி உள்ளது. பாஜக அரசு சாமானிய மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் செயல் படுவதற்கு இதுவே உதாரணம்.
அதிமுகவை பிரித்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை பெரிதாக்கி, அதிமுகவை அழிக்க நினைக்கிறது பாஜக. ரயில்வே திட்டங்களில் தென் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்தில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் ஒன்று சேர்ந்து முறையிட்டால் தான் திட்டங்களைப் பெற முடியும்.
கொல்லம் ரயிலை சிவகாசியில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப். 21-ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்தேன். வரும் செப்டம்பர் 21-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சிவகாசியில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம்." இவ்வாறு அவர் கூறினார்.