கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்போது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் அதிகாரிகள் ஒரு வார காலம் அவகாசம் அளித்தனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகேயுள்ள வெள்ளாளபுரம் ஏரி 365 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஏரியை ஆக்கிரமித்து வசித்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி, நேற்று வட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், வெள்ளாளபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.
அப்போது, பெண்கள் கதறி அழுதபடி வட்டாட்சியரிடம் கீழே விழுந்து இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தினர். ஒரு வாரத்துக்குள் வீடுகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும், என பொதுமக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.