சைதாப்பேட்டை மருத்துவமனை வளாக கிணற்றில் மருத்துவக் கழிவுகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சைதாப்பேட்டை மருத்துவமனை வளாக கிணற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக உண்மையை அறிய இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் கிணற்றை சுத்தம் செய்தது.

இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், மருத்துவர் கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மருந்துவக் கழிவுகள் கிணற்றில் கொட்டப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.

காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் ஆகிய அனைத்தும் அகற்றப்பட வேண்டியதுதான். கிணறில் கொட்டியது தவறு. இது குறித்து நேரில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்தாளுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் காலாவதியான மருந்து எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே காலாவதியான மருந்து கொட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE