சென்னை தி.நகர் ப்ரீமியம் பார்க்கிங் | காருக்கு ரூ.60, டூ வீலருக்கு ரூ.15 கட்டணமாக நிர்ணயம்

By செய்திப்பிரிவு

சென்னை: தி.நகரில் உள்ள பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை "ப்ரீமியம் பார்கிங்" இடமாக மாற்றி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு மணி நேரத்திற்கு காருக்கு ரூ.60-ம், டூ வீலருக்கு ரூ.15-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பாண்டி பஜார் நடைபாதை வளாகம் அருகில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இதில் பான்டி பஜாரில் உள்ள நடைபாதை வளாகத்தில் சாலையோர வாகன நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை "ப்ரீமியம் பார்கிங்" இடமாக மாற்றி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்த சாலையில் ஒரு மணி நேரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்த 15 ரூபாயும், 4 சக்கர வாகனத்தை நிறுத்த 60 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE