தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற வசதிகளை ஏற்படுத்துங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் அமர்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: "அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

நீங்கள் இதில் நேரடியாக தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கித் திட்டவரைபடத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.

செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் இந்நெறிமுறையை பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE