சிறுவாணி அணையில் நீர் திறப்பு: பினராயி விஜயனுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறுவாணி அணையிலிருந்து நீரை திறந்து விட்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

அதில் " சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கேரள முதல்வர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை இன்று உடனடியாக திறந்துவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE