விஐடியில் 163 பேருக்கு கரோனா தொற்று: பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுவருகிறது. குறிப்பாக சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை விஐடியில் 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். உணவு அரங்கு , விடுதி அறை என அனைத்திலும பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களில் 99% பெரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE