“கருணாநிதி சிலையைப் பார்த்தவுடன் நெஞ்சம் உருகிவிட்டது” - துரைமுருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: “கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "ஓமந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவையை செங்கல், செங்கல்லாக செதுக்கியவர் மு.கருணாநிதி. நம்மைப் பொறுத்தவரை இந்நாள் ஒரு பெருநாள். கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது. சிலையைப் பார்த்துவிட்டு கண்ணீர் விடாமல் வெளியே வரமுடியவில்லை. நேரில் பார்ப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சிலை வைக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் முதல்வர். அண்ணா சாலையில் காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடுத்து தற்போது கலைஞரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார் குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE