சென்னை: மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 2983 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக மழைநீர்வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகளில் புதிதாக அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. பருவமழைக் காலங்களில் மழைநீர்கால்களில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கும் நிலை உள்ளதாக தொடர் புகார்கள் உள்ளது.
இதற்கு மழைநீர் வடிகால்கள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படுவதும் முக்கிய காரணம் எனக் கண்டறியப்பட்டு, வடிகால்கள் வழியாக கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்போது மழைநீர்வடிகால்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வருவதால், விதிமீறல் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 3799 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றி வந்தததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்,சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு சென்னை மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ண்ட கள ஆய்வில் 2983 முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளது.
» சிங்கார சென்னை 2.0 திட்டம்: கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
» 'வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக வாழுங்கள்' - மணமக்களுக்கு முதல்வர் வாழ்த்து
அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்தில் 1628 சட்டத்திற்குப் புறம்பான முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு 19.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.