பேரறிவாளன் விடுதலை | “மற்ற 6 பேர் விடுதலைக்காக சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்” - சீமான்

By செய்திப்பிரிவு

சென்னை: "பேரறிவாளனுக்குக் கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு, ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் வாடும் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கூடங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும், போராட்ட மேடைகளுக்கும் நடந்து, நடந்து தேய்ந்த அம்மா அற்புதம்மாளின் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும். சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும்.

தமிழக அரசு தம்பி பேரறிவாளனுக்குக் கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் வாடும் மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE