தமிழகம்

இந்தாண்டு 2 லட்சம் பேருக்கு டெங்கு பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: 2022 ஆம் ஆண்டில் 2 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு தடுப்புப் பணியில் பணியாற்றிய முன் களப்பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், "டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் வகையிலும், டெங்கு காய்ச்சல் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் "தேசிய டெங்கு தடுப்பு தினம்" இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து செய்து வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உடனடி சிகிச்சை அளித்து வருகின்றன. ‘எலிசா’ முறையில் டெங்குக் காய்ச்சலை கண்டுபிடிக்க பரிசோதனை மையங்கள் 125 ஆக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு விழிப்புணர்வு நாள் கூட்டத்தினையொட்டி ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்தும் விரிவாக விளக்கும் வகையில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய வட்டார சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டு டெங்குக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் 42,311 என்கிற குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு 2,400 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2021ல் டெங்குக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு 1,73,199 பரிசோதனைகள் செய்யப்பட்டு 6,039 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது.

2022ஆம் ஆண்டு 2 லட்சம் பரிசோதனைகள் இலக்கு நிர்ணயித்து 5 மாதங்களில் 66,747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 2,485 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளித்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT