சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகளுக்கு என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. எனவே அங்கிருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும்.இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவுக் கழக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன்தான் அரிசி அனுப்பப்படுகிறது. மேலும், அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.