தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிப்பு: கருணாநிதி கண்டனம்

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து இலங்கை சிறைபிடித்துச் செல்லும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காண வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விரட்டி அடிப்பதும், இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையில் அடைப்பதும், காவலை நீடிப்பதும், மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் நாசமாக்குவதும் தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. மத்தியில் ஆட்சி மாறியபோது நமது பிரதமர் மோடி அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்ஷே சந்தித்த பிறகு இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 23-6-2014 அன்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் பத்து படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மூன்று படகுகளில் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள். 7 விசைப்படகு மீனவர்கள் தப்பித்த போதிலும், 3 படகுகளில் இருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். ஜெகதாபட்டினம் பகுதியில் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர கடந்த 18ஆம் தேதி நாகை மீனவர்கள் 7 பேர் சிறை பிடிக்கப் பட்டு இலங்கையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு முன்பே தமிழக மீனவர்கள் 46 பேர் இன்னமும் இலங்கை சிறையிலே உள்ளார்கள். இலங்கை சிறைகளில் வாடும் இந்த 64 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட மத்திய அரசு, குறிப்பாக இந்தியப் பிரதமர் அவர்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, இந்தக் கொடுமை தொடர்ந்து நீடிக்கப்படாமல் தடுக்கப்பட நிரந்தரமான ஒரு தீர்வு காணவும் பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அரசுடன் பேசி முடிவு காண வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE